×

மல்லசமுத்திரம் அருகே இளம்பெண் மர்மச்சாவில் திடீர் திருப்பம்

திருச்செங்கோடு: மல்லசமுத்திரம் அருகே இளம்பெண் மர்மச்சாவு குறித்து பக்கத்து வீட்டு பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தை அடுத்த செண்பகமாதேவி கரட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் குமார்(34). இவர் ரிக் வண்டியில் டிரில்லராக, வடமாநிலத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு அம்பிகா(30) என்ற மனைவியும், 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்ற அம்பிகாவை உறவினர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். நேற்று முன்தினம் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் அம்பிகாவின் தற்கொலை முயற்சிக்கும், மரணத்திற்கும் பக்கத்துவீட்டு பெண்ணின் துன்புறுத்தலே காரணம் என்பது தெரியவந்துள்ளது.

இறந்து போன அம்பிகாவின் பக்கத்து வீட்டில் வசிப்பவர் பெயிண்டர் தமிழ்ச்செல்வன்(31). அவரது மனைவி தமிழரசி(30).  தனது கணவர் தமிழ்செல்வனுக்கும், அம்பிகாவுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக சந்தேகமடைந்து தமிழரசி, அம்பிகாவுடன் சண்டை போட்டதுடன், கடந்த 15 நாட்களாக பல முறை அம்பிகாவை தாக்கியதாகவும்  கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மனஅழுத்தத்தின் காரணமாகவே அவர் தற்கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இதற்கிடையில் சேலம் அரசு மருத்துவமனையில் இறந்து போன அம்பிகாவின் சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் ஆதித்தமிழர் கட்சியின் நாமக்கல் மாவட்ட செயலாளர் அருண்பாண்டியன் தலைமையில் நிர்வாகிகளும் திரண்டு, சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து அவர்களை சமாதானப்படுத்திய போலீசார், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து தமிழரசி மற்றும் அவரது உறவினர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Marmacha ,Mallasamudram ,
× RELATED மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா