பண்ருட்டி, டிச. 21: பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் கடந்த 10 நாட்களாக மாணிக்கவாசகருக்கு பிரம்மோற்சவம் விமரிசையாக நடந்து வந்தது. இதன் முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கோயில் திருக்குளத்தில் தீர்த்தவாரி முடிந்து சாமி அம்பாள் திரும்பும்போது சாமியின் சடா முடி தலையில் கங்கை இருப்பதை அறிந்த பார்வதி தேவியார் இறைவனிடம் கோபித்துக்கொண்டு கோயிலுக்குள் சென்று கதவை தாளிட்டுக் கொண்டார். உடனடியாக அங்கு பரவை நாச்சியாருடன் வந்த சுந்தரமூர்த்தி சாமிகள் அம்பாளின் கோபத்தை உணர்ந்து சிவனின் பெருமைகளை அம்பாளிடம் எடுத்து கூறினர். ஆனாலும் கோபம் தனியாமல் அம்பாள் இருப்பதை உணர்ந்து சாமியிடம் தூது செல்கின்றனர். இதேபோல 3 முறை சாமியிடமும், அம்பாளிடமும் தூது சென்று சாமி- அம்பாளின் பெருமைகளை கூறி சாமி அம்பாள் ஊடலை முடிவுக்கு கொண்டு வந்தனர். பின்னர் சாமி அம்பாள் பக்தர்களுக்கு ஆனந்த தாண்டவமாடி காட்சி அளிக்கும் ஐதீக நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தங்களது குடும்ப பிரச்னை தீரவும், வேண்டுதல் நிறைவேறவும் நேர்த்திக் கடனுக்காகவும் சாமி அம்பாளை வணங்கி வழிபட்டு சென்றனர்.