சுசீந்திரம், டிச.16: சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில் மார்கழி திருவிழா கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 3ம் திருவிழாவன்று இரவு மக்கள் மார் சந்திப்பு நடந்தது. 4ம் திருவிழாவான நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு பூதவாகனத்தில் சுவாமி திருவீதியுலா, இரவு 10.30 மணிக்கு பரங்கி நாற்காலி வாகனத்தில் சுவாமி திருவீதியுலா வருதல் ஆகியவை நடந்தது. 5ம் திருவிழாவான நேற்று அதிகாலை 5 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி திருவீதியுலா வரும் நிகழ்ச்சியும், பஞ்சமூர்த்தி தரிசனமும் நடந்தது. தொடர்ந்து 6 மணிக்கு கருட தரிசனம் நிகழ்ச்சி நடந்தது. அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சுவாமி, அம்பாள், பெருமாள் ஆகியோர் தாணுமாலயன் சுவாமி கோயில் அருகே உள்ள வீரமார்த்தாண்ட விநாயகர் கோயில் முன்பு கிழக்கு நோக்கி எழுந்தருளினர்.
அப்போது வானத்தில் கருடன் 3 முறை சுவாமிகளையும், கோயில் ராஜ கோபுரத்தையும் வலம் வந்தது. இதை கண்ட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சாமியை தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் உள்ளூர், வெளியூர் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். இரவு 10.30 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி, திருவீதியுலா, 10.30 மணிக்கு சிறப்பு நாதஸ்வர இசை நிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது. 6ம் திருவிழாவான இன்று காலை 8 மணிக்கு பூங்கோயில் வாகனத்தில் சுவாமி திருவீதியுலா, இரவு 10 மணிக்கு இந்திர வாகனத்தில் சுவாமி திருவீதியுலா வரும் நிகழ்ச்சிகள் நடக்கிறது. தாடர்ந்து 9ம் திருவிழா (19ம் தேதி) காலை தேரோட்டம் நடக்கிறது.