×

தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை

கிருஷ்ணகிரி, மார்ச் 29:  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஜெயசந்திரபானு ரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ள நிலையில், கொரோனா நோய் தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு தளர்வுகளுடன் கூடிய 144 ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. எனவே, தேர்தல் ஆணையத்தின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள், மாநில கட்சிகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட கட்சிகள், பிரதிநிதிகள், சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் தவறாமல் பின்பற்ற வேண்டும்.

அதன்படி, வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தல் தொடர்பாக நடைபெறும் பொதுக்கூட்டங்கள், பேரணிகள் மற்றும் பிரசாரங்கள் போன்றவை, கட்டாயமாக முன் அனுமதி பெற்று நடத்தப்பட வேண்டும். மேலும், கொரோனா நோய் தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள், மாநில கட்சிகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் ஆகியோர் தேர்தல் பரப்புரையின் போது தேர்தல் பொது கூட்டங்கள், வாக்கு சேகரிப்பு, பேரணிகள் மற்றும் பிரசாரங்கள் போன்ற நிகழ்ச்சிகளில் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்தலை அமைதியான, பாதுகாப்பான முறையில் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றியும், அரசு பொது சொத்துக்கள் மற்றும் இயற்கை வளங்களின் மீது தேர்தல் அரசியல் கட்சி விளம்பரங்கள் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், உரிய ஆவணங்கள் இன்றி அதிகப்படியான பணம், எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள, தீங்கு விளைவிக்கும் மற்றும் கூர்மை முனை கொண்ட ஆயுதங்கள், பொதுமக்கள் அச்சம் கொள்ளும் வகையில் வெளியில் எடுத்துச் செல்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட விதிமுறைகள் அனைத்தும் வரும் மே 4ம் தேதி வரை, அமலில் இருக்கும். எனவே, பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாகவும், அமைதியாகவும் தேர்தலை நடத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும். உத்தரவுகளை மீறும் நபர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 188ன்படி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags : Election Commission ,
× RELATED மதம், சாதி அடிப்படையில் பிரிவினையை...