- திருவண்ணாமலை மாநகராட்சி
- திருப்பத்தூர் நகராட்சி
- வேலூர்
- விஜிலென்ஸ் பொலிஸ்
- திருவண்ணாமலை கார்ப்பரேஷன்
- தமிழ்நாடு…
வேலூர், ஜூலை 8: திருவண்ணாமலை மாநகராட்சி, திருப்பத்தூர் நகராட்சியில் கணக்கில் வராத பணம் பறிமுதல் தொடர்பாக அதிகாரிகள் உட்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, விஜிலென்ஸ் போலீசார் விசாரித்து வருகின்றனர். தமிழகத்தில் கடந்த 3ம் தேதி திருவண்ணாமலை மாநகராட்சி, திருப்பத்தூர், பேரணாம்பட்டு, வாலாஜா நகராட்சிகள் உட்பட 41 இடங்களில் விஜிலென்ஸ் போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.57.98 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் திருப்பத்தூர் நகராட்சியில் விஜிலென்ஸ் போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் கைப்பற்றவில்லை. மேலும் உதவி வருவாய் அலுவலர் கார்த்திகேயன், வருவாய் ஆய்வாளர் சதீஷ்குமார், பில் கலெக்டர் சிவகுமார், வருவாய் உதவியாளர் கோட்டீஸ்வரன் ஆகியோரின் வங்கி பண பரிவர்த்தனைகள் சந்தேகத்திற்கிடமானதாக உள்ளது தெரியவந்தது.
மேலும் அவர்கள் பராமரித்து வந்த சொத்துவரி மதிப்பீடு தொடர்பான பதிவேடுகள் மற்றும் ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளதால், அலுவலர்கள் சொத்துவரி சம்பந்தமாக பொதுமக்களிடமிருந்து சட்டவிரோதமாக பணம் வசூல் செய்து தங்களுக்குள் பகிர்ந்து கொண்டுள்ளதற்கான முகாந்திரம் இருப்பதாக தெரிகிறது. இதையடுத்து, உதவி வருவாய் அலுவலர் கார்த்திகேயன், வருவாய் ஆய்வாளர் சதீஷ்குமார், பில் கலெக்டர் சிவகுமார், வருவாய் உதவியாளர் கோட்டீஸ்வரன் ஆகிய 4 பேர் மீது திருப்பத்தூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அதேபோல், திருவண்ணாமலை மாநகராட்சி அலுவலகத்தில் கடந்த 3ம் தேதி, விஜிலென்ஸ் போலீசார் நடத்தி சோதனையில், கணக்கில் வராத ரூ.55 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக இளநிலை பொறியாளர் பிரிவு பாலாஜி, டவுன் சர்வேயர் கார்த்திகேயன், இளநிலை பொறியாளர் விஜயகுமார், இளங்கோ, மணிகண்டன் ஆகிய 5 பேர் திருவண்ணாமலை விஜிலென்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அதேபோல், ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா நகராட்சி அலுவலகத்தில் ரூ.13,200, வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பணம் ரூ.8,600 மற்றும் ஜிபேயில் பெற்ற ரூ.20 ஆயிரத்தை விஜிலென்ஸ் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட விஜிலென்ஸ் போலீசார் வழக்குப்பதிவு ெசய்து இதுதொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
