மயிலாடுதுறை, மார்ச் 10: மகா சிவராத்திரியையொட்டி மயிலாடுதுறை மயூரநாதர் கோயிலில் நாட்டியாஞ்சலி விழா துவங்கியது.மகா சிவராத்திரியையொட்டி மயிலாடுதுறை மயூரநாதர் கோயிலில் 15ம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி விழா நேற்று துவங்கியது. சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை தலைவர் பரணிதரன் வரவேற்றார். விழாவை திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தம்பிரான் சுவாமி, மயிலாடுதுறை எஸ்பி நாதா, அறக்கட்டளை அறங்காவலர்கள் செல்வம், சிவலிங்கம், ரவிச்சந்திரன், செந்தில்வேல், பாண்டுரங்கன், சத்தியன், செந்தில்குமார், அழகேசன் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர்.முதல்நாள் நாட்டியாஞ்சலி விழாவில் சென்னை நாட்டிய குழுவினர், கலைமாமணி பார்வதி ரவி கண்டசாலா குழுவினர், கோயம்புத்தூர் சங்கரம் ஸ்கூல் ஆப் டான்ஸ் குழுவினர் மற்றும் விஷ்ணு நாட்டியாலயா உள்ளிட்ட குழுவினரின் நாட்டிய நிகழ்ச்சி நடந்தது.
இதைதொடர்ந்து மயூர நாட்டியாஞ்சலி விழாவில் நாதஸ்வர இசை கலைஞர் விவேகானந்தனின் கலைப்பணியை பாராட்டி “மயூர நாதஸ்வர சுகஸ்வர இளவல்” விருது, தவில் இசை கலைஞர் ரெட்டியூர் ஹரிஹரனுக்கு “மயூர லயஞான தவிலிசை இளவல்” என்ற விருது, நடன கலைஞர் சென்னை நரேந்திரகுமாருக்கு “மயூர நட்டுவாங்க நண்மனி” விருது, மூத்த நடன கலைஞர் கலைமாமணி பார்வதி ரவி கண்டசாலாவின் கலை பணியை பாராட்டி “மணிமேகலை பொற்சதங்கை” என்ற விருதை எஸ்பி நாதா, திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தம்பிரான் சுவாமி வழங்கினர்.மயூர நாட்டியாஞ்சலி விழா நாளை (11ம் தேதி) வரை நடக்கிறது. ஒவ்வொரு நாளும் மாலை 5 மணி முதல் இரவு வரை பல்வேறு நாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. முதல் நாள் நாட்டியாஞ்சலி விழாவில் ஏராளமான கலை ஆர்வலர்கள் பங்கேற்றனர். அறக்கட்டளை செயலாளர் விஸ்வநாதன் நன்றி கூறினார்.