×

அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுருவை முற்றுகையிட்டு அதிமுக எம்எல்ஏ வாக்குவாதம்

 

சின்னசேலம், ஜூன் 25: சின்னசேலத்தில் அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுருவை முற்றுகையிட்டு அதிமுக எம்எல்ஏ ராகேஷ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வாக்குவாதம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளராக குமரகுரு செயல்பட்டு வருகிறார் . இவர் நேற்று காலை சின்னசேலத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சிக்கு வந்துள்ளார். நிகழ்ச்சி முடிந்த நிலையில் மாவட்ட செயலாளர் குமரகுரு சின்னசேலம் அதிமுக ஒன்றிய அலுவலகத்திற்கு வந்துள்ளார். பின்பு அவர் அதிமுக ஒன்றிய, நகர நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தியதாக தெரிகிறது. தகவலறிந்த சங்கராபுரம் எம்எல்ஏ ராகேஷ் எனக்குத் தெரியாமல் எப்படி ஆலோசனைக் கூட்டம் நடத்தலாம்.

எனக்கு ஏன் அழைப்பு விடுக்கவில்லை என்று கேட்டு மாவட்ட செயலாளர் குமரகுருவிடம் வாக்குவாதம் செய்தார். இதையடுத்து எம்எல்ஏ ராகேஷின் ஆதரவாளர்களும் குமரகுரு மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி டிஎஸ்பி மனோகரன் தலைமையில் சின்னசேலம் இன்ஸ்பெக்டர் ஜோசப் செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர் நந்தகோபால் மற்றும் 25க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருதரப்பினரிடமும் பேசி சமாதானம் செய்தனர்.

அப்போது மாவட்ட செயலாளர் குமரகுரு இந்த இடத்தை விட்டு சென்றால் தான், நாங்கள் கலைந்து போவோம் என்று எம்எல்ஏ ராகேஷின் தரப்பினர் கூறினார்கள். இதையடுத்து மாவட்ட செயலாளர் குமரகுருவை பாதுகாப்பாக போலீசார் அனுப்பி வைத்தனர். இதையடுத்து ராகேஷ் எம்எல்ஏ ஆதரவாளர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் சின்னசேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : AIADMK MLA ,AIADMK District ,Kumaraguru ,Chinnasalem ,Rakesh ,Kallakurichi ,
× RELATED காட்டுமன்னார்கோவிலில் 25 கிராம மக்கள் மின் தடையால் இரவு முழுவதும் அவதி