*ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது
திருமலை : திருச்சானூரில் நாளை பத்மாவதி தாயார் கோயிலில் வசந்தோற்சவம் தொடங்குகிறது. இதை முன்னிட்டு நேற்று ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது.திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோயிலில் ஏப்ரல் 30 முதல் மே 2 வரை வருடாந்திர வசந்தோற்சவம் நடைபெற உள்ளது. இதனையொட்டி நேற்று கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது.
இதற்காக காலை 6 மணி முதல் 9 மணி வரை கோயில் ஆழ்வார் திருமஞ்சனத்தில் கோயில் வளாகம், சுவர்கள், மேற்கூரை மற்றும் பிற பூஜை பொருட்களை நீரால் தூய்மைப்படுத்திய பிறகு, நாமகட்டி திருசூர்ணம், கஸ்தூரி மஞ்சள், பச்சை கற்பூரம், கட்டி கற்பூரம், சந்தனப்பொடி குங்குமம், கிச்சிலிகிழங்கு மற்றும் பிற மூலிகை பொருட்கள் கலந்த புனித நீர் கோயில் முழுவதும் தெளிக்கப்பட்டது.
பின்னர் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். வசந்தோற்சவத்தை முன்னிட்டு, தாயார் கோயிலில் இன்று மாலை 6 மணிக்கு அங்குரார்ப்பணம் நடைபெறும்.நாளை முதல் மே 2 வரை வசந்தோற்சவம் நடைபெறும் நிலையில் மே 1 அன்று காலை 9.30 மணிக்கு தங்க ரதத்தில் சுவாமி வீதி உலா நடைபெறும். வசந்தோற்சவத்தின் மூன்று நாட்களில், வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 2.30 மணி முதல் 4.30 மணி வரை சுக்ரவாரப்பு தோட்டத்தில் தாயார் உற்சவத்திற்கு திருமஞ்சனம் நடைபெறும்.
இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை நான்கு வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். இதில் பக்தர்கள் தலா ரூ.150 செலுத்தி ஒரு நாள் வசந்தோற்சவத்தில் பங்கேற்கலாம்.
இதனையொட்டி ஏப்ரல் 30 முதல் மே 2 வரை கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, வேத ஆசிர்வாதம் மற்றும் மே 1 அன்று நடைபெறவிருந்த லட்சுமி பூஜை, குங்குமார்ச்சனை, மற்றும் வி.ஐ.பி தரிசனம் ஆகியவற்றை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. இதில் கோயிலின் துணை செயல் அதிகாரி ஹரிந்திரநாத், அர்ச்சகர்கள் பாபுசாமி, கண்காணிப்பாளர் ரமேஷ், கோயில் ஆய்வாளர் சாலபதி மற்றும் அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இன்று அங்குரார்ப்பணம்
வருடாந்திர வசந்தோற்சவத்தை முன்னிட்டு, பத்மாவதி தாயார் கோயிலில் இன்று மாலை 6 மணிக்கு அங்குரார்ப்பணம் நடைபெறும்.
