காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நேற்று கார்த்தி சிதம்பரம் எம்.பி அளித்த பேட்டி: இந்தத் தேர்தலில் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது என கூறுவது தவறான புள்ளிவிவரம். எஸ்ஐஆர்க்கு முன்பு குறிப்பிட்ட வாக்காளர்கள் பட்டியலில் இருந்தனர். அந்த பட்டியலை வைத்துத்தான் தேர்தல் நடந்தது. அதில் குறிப்பிட்ட நபர்கள் வாக்களித்து இருப்பார்கள். உதாரணத்துக்கு 12 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து இருப்பார்கள்.
8 பேர் வாக்களித்து இருப்பார்கள். அப்படி என்றால் 66 சதவீதம் என்று அர்த்தம். அதில் 2 பேர் இறந்து இருக்கலாம், அல்லது ஊரைவிட்டு போய் இருக்கலாம். எஸ்ஐஆரில் அந்த 2 பேரை நீக்கி இருப்பார்கள். அதே 8 பேர் தான் திருப்பி வந்து வாக்களித்து உள்ளனர். ஆனால் உடனே 80 சதவீதம் வாக்களித்து இருப்பது போல் தெரியும். முன்பு 12 என இருந்தது. எஸ்ஐஆர்க்கு பின்பு 10 ஆக மாறி விட்டது. ஆனால் வாக்களிப்பது என்பது 8 பேர் தான்.
தொகுதிவாரியாக எவ்வளவு நபர்கள் வாக்களித்தார்கள் என்பதைத்தான் எடுத்துக் கொள்ளவேண்டும். கடந்த தேர்தலில் எவ்வளவு பேர் வாக்களித்தனர். இந்த தேர்தலில் எவ்வளவு பேர் வாக்களித்து உள்ளனர் என பார்க்க வேண்டும். ஒவ்வொரு ஐந்தாண்டு தேர்தலிலும் 40 லட்சம் பேர் கூடுதலாக வாக்களித்து கொண்டே தான் வருகிறார்கள். ஐந்தாண்டுகளுக்கு பிறகு 40 லட்சம் பேர் உயர்வது என்பது நார்மல் தேர்தல் தான். நம்பரை தான் கம்பேர் செய்ய வேண்டும். சதவீதத்தை பார்க்க கூடாது. இவ்வாறு கூறினார்.
