தேன்கனிக்கோட்டை, ஏப்.18: தேன்கனிக்கோட்டை அருகே சாலையில் சுற்றித்திரிந்த ஒற்றை யானையை வனத்துறையினர் விரட்டியடித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே குந்துக்கோட்டையை ஒட்டி அஞ்செட்டி வனப்பகுதியில், ஒற்றை யானை கடந்த சில நாட்களாக சாலையில் சுற்றித்திரிந்து வருகிறது. நேற்று காலை, அந்த யானை சாலையில் சுற்றித்திரிவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், தேன்கனிக்கோட்டை வனத்துறை ஊழியர்கள் அப்பகுதிக்கு விரைந்து சென்று, கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். தொடர்ந்து சாலையில் சுற்றித்திரிந்த ஒற்றை யானையை நோக்கி, பட்டாசுகளை கொளுத்தி போட்டனர். பட்டாசு சத்தத்தை கேட்டு மிரண்ட யானை, பட்டாசு வெடித்த வனத்துறை மற்றும் அப்பகுதியில் திரண்டிருந்த பொதுமக்களை நோக்கி பாய்ந்தவாறு விரட்டியது. இதனால், அச்சமடைந்த வனத்துறை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் தலைதெறிக்க அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து, அந்த யானை அங்கிருந்து காட்டுப்பகுதிக்குள் சென்றது. அதனைத்தொடர்ந்து அங்கு நின்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக செல்லும்படி வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.
