×

திருக்குற்றால நாதசுவாமி கோவிலில் சித்திரை விசு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவக்கம்

தென்காசி: குற்றாலம் திருக்குற்றால நாதசுவாமி திருக்கோவிலில் சித்திரை விசு திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. குற்றாலம் குற்றாலநாதசுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை விசு திருவிழா நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா இன்று காலை 5.55 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் அலங்கார தீபாரதனைகள் நடந்தது. சிவனடியார்களின் சிவ பூத கனவாத்தியங்களும் இசைக்கப்பட்டன. பூஜைகளை

ஜெயமணி சுந்தரம் பட்டர், பிச்சுமணி என்ற கண்ணன் பட்டர்,கணேசன் பட்டர், மகேஷ் பட்டர் ஆகியோர் நடத்தி வைத்தனர். இதில் அறங்காவலர் குழு தலைவர் சக்தி முருகேசன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் வீரபாண்டியன், திருவிளக்கு பூஜை கமிட்டி தலைவர் இலஞ்சி அன்னையாபாண்டியன், கல்யாணசுந்தரம், அருண், சொக்கம்பட்டி 6ம் திருநாள் மண்டகப்படிதாரர்கள் சார்பில் வெள்ளத்துரை, சாமி, தங்கபாண்டியன், செந்தூர் பாண்டியன், முத்துக்குமார் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். விழாவில் 11ம் தேதி காலை 9.30 மணிக்கும், இரவு 7 மணிக்கும் திருக்கோவிலில் நடராஜ மூர்த்திக்கு தாண்டவ தீபாராதனை நடக்கிறது. 12ம் தேதி காலை 10 மணிக்கு திருக்கோவில் உள் மண்டபத்தில் வைத்து நடராஜ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடக்கிறது.

14ம் தேதி காலை 10.40 மணிக்கு மேல் 11.40 மணிக்குள் விசு தீர்த்தவாரி நடக்கிறது. இந்த ஆண்டு குற்றாலநாத சுவாமி கோவில் மற்றும் சித்திர சபையில் கும்பாபிஷேக திருப்பணி வேலைகள் தொடங்கி பாலாலயம் செய்யப்பட்டு விட்டதால் தேரோட்டம் நடைபெறாது. சுவாமி வீதி உலா திருக்கோயில் உள் மண்டபத்தில் மட்டும் நடைபெறும். ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் ஆறுமுகம், அறங்காவலர் குழு தலைவர் சக்தி முருகேசன், உறுப்பினர்கள் ஸ்ரீதர், ராமலட்சுமி பெருமாள், சுந்தர்ராஜ், வீரபாண்டியன் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags : Chithirai Vishu festival ,Thirukkuttala Nathswamy temple ,Courtallam Thirukkuttala Nathswamy temple ,Courtallam Courtallanathswamy temple ,
× RELATED போதிய கூட்டமில்லை என மாவட்ட செயலாளர்...