விருதுநகர், மார்ச் 31: தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் வருகிற ஏப்ரல் 23ம் தேதி நடக்க உள்ளது. இதனையடுத்து, இத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நேற்று முதல் தொடங்கியது. வருகிற ஏப்ரல் 6ம் தேதி வரை வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட உள்ளது. வேட்பு மனுக்கள் பரிசீலனை வருகிற ஏப்ரல் 7ம் தேதி நடக்க உள்ளது. வருகிற ஏப்ரல் 9ம் தேதி வேட்புமனு திரும்ப பெற கடைசி நாளாகும். விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்ைட, திருச்சுழி, சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர், விருதுநகர் ஆகிய 7 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்த 7 சட்டமன்றத் தொகுதிகளுக்குமான வேட்புமனுத்தாக்கல் நேற்று தொடங்கியது.
விருதுநகர் தாசில்தார் அலுவலகத்தில், தேர்தல் அலுவலர் ஜான்சன் தேவசகாயத்திடம் வேட்பு மனுவை நேற்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் லட்சுமணன் தாக்கல் செய்தார். அப்போது அவருடன் 4 பேர் வந்திருந்தனர். திருச்சுழி தாலுகா அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திக் ராஜா, தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தியிடம் வேட்புமனுவை வழங்கினார். அதேபோல், அகிம்சா சோசலிஸ்ட் கட்சி (சுயேச்சை அந்தஸ்து/சிறிய கட்சி) சார்பில் வெள்ளச்சாமி என்பவர் வேட்புமனு தாக்கல் செய்தார். சாத்தூர் தொகுதிக்கு போட்டியிட நாம் தமிழர் கட்சி ஆனந்தராஜா, மாற்று வேட்பாளர் அலெக்சாண்டர் ஆகிய இருவரும் தலா இரண்டு வேட்பு மனுக்களும், சுயேச்சையாக டாக்டர் விஜேந்திரன் யாதவ் ஆகியோர் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் கனகராஜிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.
