பாலக்காடு : கேரளாவில் பாலக்காடு மாவட்டம் உட்பட 14 மாவட்டங்களில் உள்ள மொத்தம் 140 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஏப்.9ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி தேர்தல் ஆணைய ஊழியர்கள் மக்களிடையே தெரு நாடங்கள், கலை நிகழ்ச்சிகள் மூலமாகவும், மாணவ-மாணவிகள் உறுதி எடுத்தவாறும் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தி தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். பாலக்காடு அரசு அலுவலகங்கள் ஒருங்கிணைப்பு வளாகத்தில் தேர்தல் குறித்து விழிப்புணர்வு பலகை அமைக்கப்பட்டது.
அதில் எனது ஓட்டு, எனது உரிமை என்ற வாக்கிய பலகையில் வாக்காளர்கள் தங்களது கையெழுத்துக்களை பதிவு செய்ய அமைக்கப்பட்டுள்ளன. முன்னதாக நேற்று மாவட்ட கலெக்டர் மாதவிக்குட்டி கையெழுத்திட்டு விழிப்புணர்வை மக்களிடையே தொடங்கி வைத்தார்.
ஒத்தப்பாலம் சப்-கலெக்டர் அஜித்சிங்க, ஆர்டிஓ அன்வர் சாதது ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்களும் தங்களது விருப்பங்களை எழுதியவண்ணம் கையெழுத்திட்டு தேர்தலை வரவேற்றுள்ளனர்.
