கோவை, மார்ச் 3: கோவை மாநகரில் இரவு சிறப்பு வாகன தனிக்கையில் விதிமீறல்களில் ஈடுபட்ட 220 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களுக்கு ரூ.79 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
கோவை மாநகர போலீசார் போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதற்காக அடிக்கடி வாகன தனிக்கை நடத்தி வாகனங்களுக்கு அபராதம் விதித்து வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். அதேபோல நேற்று முன்தினம் இரவு போலீசார் திடீரென சிறப்பு வாகன தனிக்கையில் ஈடுபட்டனர். போலீஸ் கமிஷனர் கண்ணன் தலைமையில், போக்குவரத்து துணை கமிஷனர் அசோக்குமார் உட்பட போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள், போலீசார் கோவை மாநகரில் 12 இடங்களில் வாகன தனிக்கையில் ஈடுபட்டனர். அதில் 220 இருசக்கரம் மற்றும் 4 சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து போக்குவரத்து உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கோவை மாநகரில் போக்குவரத்து விதிமீறல்களை தடுக்க அடிக்கடி வாகன தனிக்கையில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டு அபராதம் விதித்து வருகின்றனர். அதேபோல நேற்று முன்தினம் இரவு போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில், அவரது தலைமையில் சிறப்பு தீவிர வாகன தனிக்கை மேற்கொள்ளப்பட்டது. கோவை மாநகரில் காந்திபுரம், சித்ரா, தாமஸ் பார்க், ரெட் பீல்ட், வடகோவை சிந்தாமணி உட்பட 12 இடங்களில் இரவு 9 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை வாகன தனிக்கை செய்யப்பட்டது. அதில் நம்பர் பிளேட் முறைப்படி பொருத்தாத 12 பைக்குகள், அதிகம் சத்தம் எழுப்பும் சைலன்சர் பொருத்தி இருந்த ஒரு கார், 23 பைக்குகள், மது குடித்து வந்த மற்றும் முறையான ஆவணங்கள் இல்லாத 183 வாகனங்கள் என 220 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று ஒரே நாளில் ரூ.79 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதில் ரூ. 39 ஆயிரம் மது குடித்து வாகனங்கள் இயக்கியவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
