அன்னூர், மார்ச் 3: அன்னூர் அருகே ஒன்னக்கரசம்பாளையத்தை சேர்ந்த முருகசாமி மகன் விஸ்வநாதன்(61). தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு ராஜசேகர்(35) என்ற மகனும், ஜெயமணி என்ற மகளும் உள்ளனர். ராஜசேகர் அன்னூர் பாரதிநகரில் விஸ்வநாதனுக்கு சொந்தமான மூன்று சென்ட் இடத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். மகள் ஜெயமணி திருமணம் ஆகி பெரியநாயக்கன்பாளையம் அருகே வீரபாண்டி பிரிவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் தந்தை, மகனுக்கும் இடையே இடம் தொடர்பாக தகராறு இருந்து வந்தது. நேற்று முன்தினம் ஒன்னக்கரசம்பாளையம் அருகே ராஜசேகர் காரில் சென்று கொண்டிருந்தார். எதிரே இருசக்கர வாகனத்தில் அவர் தந்தை விஸ்வநாதன் வந்துள்ளார். தந்தை மீது ஆத்திரத்தில் இருந்த ராஜசேகர், தந்தை ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது மோதினார். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவரது தந்தையின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்து விட்டு ராஜசேகர் தப்பினார். இது குறித்து கொலை வழக்குப்பதிவு செய்து அன்னூர் போலீசார் விசாரித்தனர். இன்ஸ்பெக்டர் சுகவனம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். மேலும் தப்பி ஓடிய ராஜசேகரை தேடி வந்தனர். இந்நிலையில், கோவையில் பதுங்கி இருந்த ராஜசேகரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
