நாமக்கல்: நாமக்கல்லில், பள்ளி மாணவியை கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளி பஸ் டிரைவர் மீது குண்டாஸ் பாய்ந்தது. நாமக்கல் பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி ஒரு தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஜனவரி 28ம் தேதி காலையில் வீட்டில் இருந்த மாணவி திடீரென மாயமானார். இதனால், திடுக்கிட்ட அவரது பெற்றோர் நாமக்கல் போலீசில் புகாரளித்தனர். இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். இதில், சாவடித்தெருவில் வசித்து வரும் தனியார் பள்ளி பஸ் டிரைவர் உமாசங்கர்(44) என்பவர் மாணவியை கடத்திச் சென்றிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து, போலீசார் உமாசங்கரை கைது செய்து மாணவியை மீட்டனர். விசாரணையில், மாணவிக்கு ஆசைவார்த்தை கூறி பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து உமாசங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, மாவட்ட எஸ்பி விமலா, கலெக்டருக்கு பரிந்துரைத்தார். அவரது பரிந்துரையின் பேரில், கலெக்டர் துர்காமூர்த்தி, பஸ் டிரைவர் உமாசங்கரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து உத்தரவிட்டார். இதற்கான நகலை சிறையில் அடைக்கப்பட்டுள்ள உமாசங்கரிடம் போலீசார் வழங்கினர்.
