சென்னை: விருகம்பாக்கம் மெட்ரோ ரயில் தற்காலிக அலுவலகத்தில் தனியார் நிறுவனத்தின் மேலாளரின் விலை உயர்ந்த லேப்டாப்பை திருடிய பீகார் வாலிபரை போலீசார் கைது செய்தனர். சென்னை விருகம்பாக்கம் காளியம்மன் கோயில் சாலையில் மெட்ரோ ரயில் பணி நடந்து வருகிறது. இதற்காக அப்பகுதியில் தற்காலிக அலுவலகத்தை மெட்ரோ ரயில் பணியில் ஈடுபடும் தனியார் நிறுவனம் கன்டெய்னரில் அமைத்துள்ளது. இந்த அலுவலகத்தில் ஆதம்பாக்கம் ஷாவாஸ் காலனி 1வது தெருவை ேச்ாந்த வினோத்குமார்(39) என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார். வழக்கம் போல் கடந்த 27ம் தேதி மேலாளர் வினோத்குமார் தனது விலை உயர்ந்த லேப்டாப்பை அலுவலகத்தில் வைத்துவிட்டு, பணிகளை மேற்பார்வை செய்ய சென்றார். பிறகு மாலை வந்து பார்த்த போது லேப்டாப் மாயமாகி இருந்தது. அந்த லேப்டாப்பில் மெட்ரோ ரயில் பணிக்கான திட்டங்கள் மற்றும் அதற்கான வரை படங்கள் அனைத்து இருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, வினோத்குமார் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி நடவடிக்கை எடுக்க விருகம்பாக்கம் உதவி கமிஷனர் பாஸ்கர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து போலீசார் தற்காலிக அலுவலகம் அமைத்துள்ள பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்திய போது, மெட்ரோ ரயில் பணிகளில் உதவியாளராக பணியாற்றி வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த ஆதித்ய குமார்(20) என தெரியவந்தது. உடனே போலீசார் ஆதித்ய குமாரை நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து விலை உயர்ந்த லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டது.
