பாடாலூர், மார்ச் 2: ஆலத்தூர் தாலுகா புதுக்குறிச்சி கிராமத்தில் தனியார் தார் பிளாண்ட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா புதுக்குறிச்சி கிராமத்தில் தனியார் தார் பிளாண்ட் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இதில் வெளிவரும் புகையால் சுகாதார சீர்கேடு மற்றும் கால்நடைகள், விவசாய விளைநிலங்கள் ஆகியவை பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தியடைந்த கிராம மக்கள் நேற்று காலை புதுக்குறிச்சி கிராமத்தில் ஆலத்தூர்-கொளக்காநத்தம் செல்லும் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு அரசு பேருந்தை கிராம பொதுமக்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து ஆலத்தூர் தாசில்தார் முத்துக்குமரனுக்கு தகவல் கிடைத்தது.
விரைந்து சென்ற அவர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது விரைவில் தார் பிளாண்ட் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்று அவர் உறுதி அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து ஆலத்தூர்-கொளக்காநத்தம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
