உடுமலை, பிப். 26: உடுமலை அடுத்துள்ள கணக்கம்பாளையம் குமரன் நகரில் புதிய தெருவிளக்குகள் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. உடுமலை அருகேயுள்ள கணக்கம்பாளையம் ஊராட்சி குமரன் நகர் பகுதியில் தெருவிளக்கு வசதி இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். கடந்த அக்டோபர் 2ம் தேதி நடந்த கிராம சபை கூட்டத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொடுத்த மனுவின் அடிப்படையில் தெருவிளக்கு பொருத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, ஒன்றிய நிதியிலிருந்து ரூ.2.5 லட்சம் ஒதுக்கப்பட்டு குமரன் நகர் பகுதிக்கு புதிய தெருவிளக்குகள் அமைக்கப்பட்டன. இவற்றை திமுக மாநில சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி, ஈஸ்வரசாமி எம்.பி ஆகியோர் நேற்று பயன்பாட்டுக்கு துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் உடுமலை வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் மெய்ஞானமூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஷியாம்பிரசாத், பொதுமக்கள் கலந்து கொண்டனர். 15 ஆண்டுகளுக்கு பிறகு இப்பகுதிக்கு தெருவிளக்குகள் கிடைத்துள்ளதால், அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
