புதுடெல்லி: வங்கி மோசடி வழக்கில் ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானியில் ரூ.3716கோடி மதிப்புள்ள 17 தளங்கள் கொண்ட வீட்டை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தொழிலதிபர் அனில் அம்பானி ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்காக வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாததால் அவரது பல நிறுவனங்கள் திவாலானது. இதுமட்டுமின்றி யெஸ் வங்கி உள்ளிட்ட பல வங்கிகளில் வாங்கிய கடனையும் நிறுவனம் செலுத்தவில்லை. இந்நிலையில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் குழும நிறுவனத்தின் வங்கி மோசடி வழக்கில் அனில் அம்பானியின் பல மாடிகள் கொண்ட வீட்டை பறிமுதல் செய்வதற்கு பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் தற்காலிக உத்தரவை பிறப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் அனில் அம்பானிக்கு சொந்தமாக மும்பையில் உள்ள ரூ.3,716கோடி மதிப்புள்ள அபோட் வீட்டை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 17 தளங்களை கொண்ட 66 மீட்டர் உயரமுள்ள இந்த ஆடம்பர வீடு மும்பையின் பாலி ஹில் பகுதியில் அமைந்துள்ளது. சமீபத்திய இந்த உத்தரவின் மூலமாக இந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட மொத்த சொத்துக்களின் மதிப்பு சுமார் ரூ,15700கோடியாக உள்ளது.
