புதுடெல்லி: பொதுதுறை தொலைதொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்லில் மூத்த இயக்குநராக பணியாற்றுபவர் விவேக் பன்சால். இவர் நேற்றும் இன்றும் உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜுக்கு பயணம் செய்வதாக இருந்தது. அங்கு திரிவேணி சங்கத்தில் புனித நீராடுதல், கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருந்தார். இதற்காக, பன்சாலின் பயண ஏற்பாடுகளை செய்து கவனிக்க 50 அதிகாரிகள நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொருவருக்கும் 20 விதமான பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
சங்கமத்தில் பன்சால் குளிக்க செல்லும் போது அவருக்கு தேவையான துண்டு, உள்ளாடை, செருப்பு, சீப்பு, கண்ணாடி, எண்ணெய் பாட்டில் போன்றவற்றை தயாராக வைத்திருப்பதாக ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். பன்சாலுக்கான வாகனங்கள் புதிய துண்டு போட்டு தயாராக வைத்திருக்க வேறொரு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளனர். இப்படி ஒவ்வொருவருக்கும் என்ன மாதிரியான பொறுப்புகள் என்ற விவரங்கள் அடங்கிய பட்டியல் சமூக ஊடகங்களில் கசிந்தது. இதைத் தொடர்ந்து, பன்சாலின் உபி பயணம் ரத்து செய்யப்பட்ட நிலையில் விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது அபத்தமானது, அதிர்ச்சியானது என ஒன்றிய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறி உள்ளார்.
