புதுடெல்லி: தமிழ்நாட்டில் விரைவில் சட்டபேரவை தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இதுபோன்ற சூழலில் அரசியல் கட்சிகள் மக்கள கவரும் திட்டங்கள் மற்றும் இலவசங்கள் ஆகியவை குறித்து அறிவித்து வருகின்றன. இந்த நிலையில் மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெய்சுகின் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில்,‘‘அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளாக இலவசங்களை அறிவிக்க தடை விதிக்க வேண்டும். இதனால் மக்கள் தான் ஏமாற்றப்படுகிறார்கள். மேலும் தேர்தலுக்கு முந்தைய காலக்கட்டத்தில் அரசியல் கட்சிகள் இலவச வாக்குறுதிகள் அளிப்பதை தடுக்கும் விதமாக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக இதுபோன்ற இலவசங்களை லஞ்சம் என்று அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது தலைமை நீதிபதி சூர்யகாந்த் பிறப்பித்த உத்தரவில்,‘‘இதே கோரிக்கை கொண்ட மனுவை கேரளா அரசு தரப்பில் முன்னதாக தாக்கல் செய்யப்பட்டது. தற்போது தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ளது என்று கூறி நீங்கள் மனு தாக்கல் செய்துள்ளீர்கள். உங்களது வழக்கை விசாரிக்கிறோம். ஆனால் தற்போது இதனை ஏற்க முடியாது. அதற்கான அவசரம் இப்போது கிடையாது. சட்டப்பேரவை தேர்தல் முடியட்டும் அதன் பின்னர் இதே கோரிக்கை கொண்ட நிலுவை வழக்கோடு இந்த மனுவையும் இணைத்து விசாரிக்கிறோம் என்று திட்டவட்டமாக தெரிவித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த், வழக்கின் விசாரணையை அடுத்த தேதி எதுவும் குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
