மேல்மலையனூர், பிப். 26: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் நடைபெற்ற மாசி பெருவிழாவின் பத்தாம் நாள் தெப்பல் உற்சவ விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு அங்காளம்மனுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு அபிஷேகமும் பல வண்ண பூக்களை கொண்டு அலங்காரமும் நடைபெற்ற பின்பு மகா தீபாரதனை காட்டப்பட்டது இதனை தொடர்ந்து பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து வந்தனர். பின்னர் இரவு அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் மேளதாளம் பம்பை உடுக்கை முழங்க பூசாரிகள் தாலாட்டு பாடல் பாட தெப்பல் உற்சவத்தில் அங்காளம்மன் காட்சியளித்தார். இதனை ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை திருக்கோயில் உதவி ஆணையர் சக்திவேல், அறங்காவலர் குழு தலைவர் ஏழுமலை, மற்றும் அறங்காவலர்கள், திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்
