செங்கல்பட்டு, பிப்.20: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தங்களது உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தலுக்காக பல்வேறு சந்தை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் சுய உதவிக்குழுக்கள் தங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை நேரடியாக மொத்த கொள்முதல் செய்பவர்களிடம் விற்பனை செய்யும் வகையில் மாவட்ட அளவில் மொத்த விற்பனையாளர்கள் மற்றும் மொத்த கொள்முதல் செய்வோருக்கான சந்திப்பு நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக சிங்கப்பெருமாள்கோவிலில் உள்ள வெல்கம் ஐடிசி ஓட்டலில் நாளை நடைபெறும் மண்டல அளவிலான விற்பனையாளர்கள் கொள்முதல் செய்வோருக்கான சந்திப்பில் செங்கல்பட்டு, சென்னை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள் மற்றும் அனைத்து வகை வியாபாரிகள் கலந்துகொண்டு மகளிர் சுய உதவிக்குழுக்களின் பொருட்களை கொள்முதல் செய்து மகளிர் சுய உதவிக்குழு பொருட்களை தேர்வு செய்து பயனடையலாம். மேலும் இந்நிகழ்ச்சி குறித்த தகவல்களுக்கு 9444094196 / 9789361491 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு செங்கல்பட்டு கலெக்டர் சினேகா தெரிவித்துள்ளார்.
