புதுடெல்லி: காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் எக்ஸ் பதிவில், “காங்கிரஸ் வரவேற்கும், ஆதரிக்கும் மற்றும் கொண்டாடும் உண்மையான தொழில்முனைவுக்கும், வசதியான மற்றும் பரஸ்பர லாபகரமான உறவுகள் மூலம் வணிக விரிவாக்கத்துக்கும் வித்தியாசம் உள்ளது. அதானி குழுமத்தின் நெருங்கிய கூட்டாளிகளான சாங் சுங்-லிங் மற்றும் நாசர் அலி ஷபான் அஹ்லி ஆகியோர் அதானி குழுமத்தில் பங்குகளை குவிப்பதற்காக பினாமி நிதியை அதிகளவில் பயன்படுத்தி உள்ளதாக புதிய அறிக்கைகள் வௌிவந்துள்ளன. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் ஊழல் அறிக்கை திட்டம் வௌியிட்டுள்ள ஆதாரங்களின்படி, சாங் சுங்-லிங் மற்றும் நாசர் அலி ஷபான் அஹ்லி ஆகிய இருவரும் சுவிஸ் வங்கியொன்றில் இந்த தகவல்களை ஒப்பு கொண்டுள்ளனர். முன்பு நம்பப்பட்டதை விட அதிக பங்குகளை அவர்கள் அதானி நிறுவனங்களில் வைத்துள்ளனர். கடந்த 2023ம் ஆண்டு வரை இதன் மதிப்பு சுமார் 3 பில்லியன் டாலர்கள் ஆகும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ஜெய்ராம் ரமேஷ் தன் பதிவில், “அதானி குழும மோசடி விவகாரத்தில் செபி விசாரணை மேற்கொள்ளவில்லை. அதானி குழுமத்துடன் தொடர்புள்ள 24 பங்கு பரிவர்த்தனை வழக்குகளில் 22 வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன. இதன் மீதான செபி விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. மோடானி(மோடி அதானி) மெகா ஊழலின் அனைத்து அம்சங்களையும் விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் அதை மோடி தடுக்கிறார். பிரதமர் மோடியின் உதவியுடன் அதானி குழுமம் ஒவ்வொரு வணிகத்திலும் தனது இருப்பை விரிவுப்படுத்தி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் மோடியின் ஆதரவுதான் என்பது வெளிப்படையான உண்மை” என விமர்சித்துள்ளார்.
