×

மேகதாது அணை தொடர்பான விவகாரம்; தமிழ்நாடு அரசின் மறுஆய்வு மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

 

புதுடெல்லி: தமிழக விவசாயிகளின் உயிர்நாடியாக காவிரி ஆறு விளங்குகிறது. இந்த நிலையில் காவிரியின் குறுக்கே ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா மேகதாது என்ற பகுதியில் சுமார் ரூ.9 ஆயிரம் கோடியில் புதிய அணையை கட்ட கர்நாடக அரசு முயன்று வருகிறது. இதற்கு தமிழக அரசு தரப்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரப்படுகிறது. மேலும் மேகதாது அணை கட்டுவதற்கு எதிராகவும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு எதிராகவும் தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இதையடுத்து வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம்,‘‘மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பான திட்ட வரையறை அறிக்கை தயார் செய்ய வேண்டும் என்ற கர்நாடகா அரசின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்கிறது.

இருப்பினும் அதன் மீது ஒன்றிய நீர்வள ஆணையம் முடிவு எடுப்பதற்கு முன்பாக, காவேரி நதிநீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நதிநீர் ஒழுங்காற்று ஆணையம் ஆகியவற்றின் பரிந்துரைகள் மற்றும் கருத்துகளின் அடிப்படையிலேயே முடிவு எடுக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு நவம்பர் 13ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து இந்த ஆணைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

தமிழ்நாடு அரசு தாக்கல் செய்திருந்த மறு ஆய்வு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘ மறுஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் கவனமாகப் பரிசீலனை செய்தது. அதில், முன்னதாக வழங்கப்பட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்வதற்குப் போதுமான எந்தவிதமான முகாந்திரம் இல்லை. அதுவே உச்ச நீதிமன்றத்தின் முடிவாக இருக்கிறது. எனவே அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசின் மறுஆய்வு மனுவானது தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Tags : Megedatu Dam ,Tamil Nadu government ,Supreme Court ,New Delhi ,Cauvery ,Tamil Nadu ,Karnataka government ,Megedatu ,Kanakapura taluka ,Ramanagara district ,Cauvery.… ,
× RELATED டெல்லியில் நாளை காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்