ஊட்டி: நீலகிரி மாவட்டம், கொடநாடு பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோருக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. இந்த எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ம் தேதி காவலாளியை கொலை செய்த ஒரு கும்பல் பங்களாவில் இருந்த முக்கிய ஆவணங்களை கொள்ளையடித்து சென்றது. இதுதொடர்பாக சயான் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு ஊட்டி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஊட்டி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
இவ்வழக்கில், குற்றவாளிகள் தரப்பில் மனோஜ் சாமி, சந்தோஷ் சாமி, சதீஷன் மற்றும் தீபு ஆகியோர் ஆஜராகினர். இன்று வழக்கில் ஆஜராகாத வாளையார் மனோஜிக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், வழக்கு விசாரணையின்போது, நீதிபதி சந்திரசேகரன் விசாரணையின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, வழக்கு விசாரணையை வரும் மார்ச் மாதம் 6ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
