×

மனைவிக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதால் விஷ கேக் கொடுத்து மகனை கொன்று மின் விசிறியில் தந்தை தூக்கிட்டு சாவு: தாய், மகளுக்கு தீவிர சிகிச்சை அளிப்பு

 

பெரம்பூர்: சென்னை பெரம்பூர் சங்கரமடம் தெருவில் உள்ள வாடகை வீட்டில் வசித்துவந்தவர் சகாயசெபஸ்டின் (43). இவர் தனியார் கம்பெனியில் கணக்காளராக பணியாற்றினார். இவரது மனைவி ரெக்சி பியூலா (38). இவர்களது மகள் இவாஞ்சலின் அல்வினா (8), மகன் யுவான் ஆண்டோ (4). இவர்கள் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்தனர். விருத்தாசலத்தை சொந்த ஊராககொண்ட இவர்கள், கடந்த 10 வருடங்களாக சென்னையில் வசித்தனர். இந்தநிலையில், ரெக்சி பியூலாவுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதால் அதற்காக தீவிர சிகிச்சை பெற்று வந்துள்ளார். பல லட்சம் செலவு செய்து சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. மேலும் சிகிச்சை அளிக்க பணம் இல்லாமல் தவித்துவந்துள்ளதாக தெரிகிறது. இதனிடையே பியூலா விரைவில் இறந்துவிடுவார் என்று தெரியவந்துள்ளது. இதனால் சகாய செபஸ்டின் சில மாதங்களாகவே கடும் மன உளைச்சலுடன் இருந்துள்ளார்.

‘’இந்த உலகத்தில் வாழ பிடிக்கவில்லை’’ என்று அடிக்கடி குடும்பத்தில் உள்ளவர்களிடம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், நேற்றிரவு ஒரு கேக் ஆர்டர் கொடுத்து வீட்டுக்கு வரவழைத்துள்ளார். அந்த கேக்கில்,’’ஹாப்பி பேமிலி டே’’ என எழுதப்பட்டிருந்தது. இதன்பின்னர் மனைவி, குழந்தைகளுடன் அந்த கேக்கை வெட்டிய சகாய செபஸ்டின், மனைவி, 2 குழந்தைகளுக்கு ஊட்டியுள்ளார். கேக்கை சாப்பிட்டதும் சிறிது நேரத்தில் அனைவரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்துள்ளனர். இதனிடையே இன்று காலை 8 மணி அளவில், ரெக்சி பியூலா, சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு, ‘’தன்னால் எதுவும் பேச முடியவில்லை. தங்கள் குடும்பத்தில் அனைவரும் மயக்கம் அடைந்து உள்ளோம்’ என்று தெரிவித்துவிட்டு மகளிடம் செல்போனை கொடுத்துள்ளார். இதன்பின்னர் பேசிய சிறுமி, ‘’ எங்க அப்பா இறந்துவிட்டார், எங்களை வந்து காப்பாற்றுங்கள்’’ என்று கதறி அழுதுள்ளார்.

இதையடுத்து கட்டுப்பாட்டு அறையில் இருந்து கொடுக்கப்பட்ட தகவல்படி, செம்பியம் இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி மற்றும் போலீசார் உடனடியாக விரைந்தனர். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது சகாய செபஸ்டின் தூக்கில் தொங்கியபடி இறந்துகிடந்தார். அவரது உடல் அருகே மனைவி, மகன், மகள் ஆகியோர் மயங்கி கிடந்தனர். போலீசார் கொடுத்த தகவல்படி, மருத்துவர்கள் வந்து சோதனை செய்தபோது சிறுவன் யுவான் ஆண்டோ இறந்துவிட்டது தெரிந்தது. இதையடுத்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ரெக்ஸி பியூலா, இவாஞ்சலின் அல்வினா ஆகியோரை உடனடியாக பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரெக்சி பியூலா உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிறுமி இவாஞ்சலின் அல்வினா ஆபத்து கட்டத்தை தாண்டிவிட்டதாக தெரிகிறது.

இதுகுறித்து போலீசார் விசாரித்தனர். மனைவி புற்றுநோய் காரணமாக விரைவில் உயிரிழந்து விடுவார் என்ற வேதனையில் இருந்துள்ளார். மனைவி இறந்துவிட்டால் குழந்தைகளை எப்படி வளர்ப்பது என்பது தெரியாமல் செபஸ்டின் தவித்துள்ளார். இதனால் கரையானை கொல்வதற்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்தை வாங்கிவந்து அதை கேக்கில் தடவி வைத்துள்ளார். இது மனைவிக்கு தெரியும் என்று தெரிகிறது. இதன்பிறகு அந்த கேக்கை குழந்தை, மனைவிக்கு கொடுத்துள்ளார். அவற்றை சாப்பிட்டதும் அவர்கள் மயக்கம் அடைந்துள்ளனர். இதனால் அனைவரும் இறந்து விட்டார்கள் என்று நினைத்து செபஸ்டின் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இவ்வாறு தெரியவந்துள்ளது.

Tags : Perambur ,Sahay Sebastian ,Sankaramadam Street, Perambur, Chennai ,Rexy Beula ,Evangeline Alvina ,Juan Ando… ,
× RELATED ஜோலார்பேட்டை அருகே நிலத்தகராறில்...