×

கலப்பு மருத்துவத்தை தடை செய்யக் கோரி மருத்துவர்கள் இருசக்கர வாகன பேரணி

கிருஷ்ணகிரி, பிப்.3:கிருஷ்ணகிரியில் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் கலப்பு மருத்துவத்தை தடை செய்ய வலியுறுத்தி இருசக்கர வாகன பேரணி நடந்தது. மத்திய அரசு 58 வகையான நவீன அறுவை சிகிச்சைகளை சால்ய தந்திரம் என பட்டியலிட்டு, இந்த சிகிச்சைகளை செய்ய ஆயுர்வேத மருத்துவர்களுக்கும் அனுமதி வழங்கியுள்ளது. அறுவைச் சிகிச்சை முறைகள் நவீன மருத்துவத்தை சார்ந்துள்ள சூழ்நிலையில், இதுகுறித்து முன் அனுபவம் இல்லாத ஆயுர்வேத மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பது உயிருக்கு ஆபத்தாக அமையும் எனவும், மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த கலப்பு மருத்துவத்தை தடை செய்ய வலியுறுத்தி இந்திய மருத்துவ சங்கம் சார்பில் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி நேற்று முன்தினம் ஓசூரில் துவங்கியது. தமிழகத்தில், 4 மண்டலமாக பிரித்து ஒரு குழுவிற்கு 20 பேர் என தொடர் பேரணி நடத்தப்படுகிறது. நான்கு மண்டலங்களில் இருந்து வரும் பேரணி திருச்சியில் ஒன்றிணைந்து சென்னைக்கு செல்ல உள்ளனர்.

ஓசூரில் இருந்து நேற்று முன்தினம் துவங்கிய பேரணி நேற்று கிருஷ்ணகிரி வந்தது. கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில், சங்கத்தின் தலைவர் டாக்டர் விஜயகுமார் நேற்று காலை பேரணியை துவக்கி வைத்தார். இந்த இருசக்கர வாகன பேரணி தர்மபுரி, சேலம், நாமக்கல் வழியாக திருச்சியை சென்றடையும். பின்னர் அங்கிருந்து வரும் 7ம் தேதி  சென்னைக்கு பேரணியாக செல்ல உள்ளனர். இந்நிகழ்ச்சியில், முதன்மை மருத்துவ செயலாளர் டாக்டர் சரவணன், செயற்குழு உறுப்பினர் டாக்டர் தனசேகரன், முன்னாள் தலைவர் டாக்டர் ஜோ, மூத்த உறுப்பினர்கள் டாக்டர் வெங்கடேசன், டாக்டர் கலைச்செல்வன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags : Doctors ,
× RELATED செவிலியர்களுக்கு தபால் வாக்கு: பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கோரிக்கை