- விஜய்
- செங்கோட்டையன்
- எடப்பாடி
- அஇஅதிமுக
- பொதுச்செயலர்
- எடப்பாடி பழனிசாமி
- திருச்சி விமான நிலையம்
- டி.என்.பி.எஸ்.சி 2
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
திருச்சி விமான நிலையத்தில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற இருந்த டிஎன்பிஎஸ்சி 2 மற்றும் 2ஏ முதன்மை தேர்வு, ஹால்டிக்கெட் மற்றும் தேர்வு மைய குளறுபடியால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நாங்கள் பொருந்தக் கூடிய கூட்டணியா, இல்லையா என்பதை மக்கள் முடிவு செய்யட்டும்.
கால சூழலுக்கு ஏற்ப கூட்டணி அமைப்பது இயல்பு. அதிமுக கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்று நாங்கள் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம். கூட்டணியில் சேர்ப்பது தொடர்பாக இன்னும் சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அவர்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. தேர்தல் நெருங்க நெருங்க தான் கூட்டணி முழுமை பெறும்.
அதிமுகவில் உழைப்பவர்களுக்கு நிச்சயமாக தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும். நான் இதுவரை 181 தொகுதிகளில் பிரசாரத்தை நிறைவு செய்துள்ளேன். அதிமுக தான் அனைத்து கட்சிகளை விட முன்பாகவே தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்து சென்று கொண்டுள்ளது. தவெக தலைவர் விஜய் ஒரு ஊழல்வாதி என்பதற்கு அவர் வரிஏய்ப்பு செய்ததே சாட்சி. நீதிமன்றமே அதை தன் தீர்ப்பில் கூறியுள்ளது.
அவரு எங்க வெளியில வந்து இருக்காரு… எதோ ஒரு கட்சி ஆரம்பிச்சாரு… அவ்வளவுதான். ஒரு சம்பவம் நடந்து போச்சு… நடக்க கூடாத சம்பவம் நடந்து போச்சு. அந்த சம்பவத்தில் இருந்து 72 நாட்கள் வெளியே வரல… எவ்வளவு கட்சி தலைவர்கள் இருக்காங்க… ஒரு சம்பவம் நடந்துச்சுன்னா அதை துணிந்து நின்னு அதை தீர்வு காண்பதுதான் அரசியல் கட்சிகளின் கடமையாக இருக்கும். ஆனா, கட்சி ஆரம்பிச்சு ஒரு துயரமான சம்பவம் நடந்ததற்கு பின் 72 நாட்கள் வெளியே வரல. ஆபீசையே 15 நாள் மூடிட்டாங்க… யாருமே கிடையாது. கட்சி இருக்கா? இல்லையா? என்ற நிலைமை ஏற்பட்டுவிட்டது.
இந்த கட்சியோட நிலைமை அதுதான். இவ்வாறு அவர் கூறினார். அதிமுக ஒரு கட்சியே அல்ல என்று செங்கோட்டையன் சொல்லி இருக்கிறாரே? என்ற கேள்விக்கு, ‘‘செல்லாத நோட்டுக்கு பயன் இருக்கிறதா? அதுபோல அவரைப் பற்றி பேசி என்ன பயன்? செல்லாத நோட்டுக்கு என்ன வேலியூவோ அதேதான் அவருக்கும்’’ என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
