×

செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே குப்பைகள் எரிக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் அவதி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே ரயில்வே மேம்பாலத்தின் கீழ் தினந்தோறும் எரிக்கப்படும் குப்பையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். ​செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழ், செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் நகராட்சி சார்பில் தினந்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டி எரிக்கப்படுவதால் அப்பகுதியே புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

​மேம்பாலத்தில் எழும் அடர்ந்த புகையினால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் வாகனத்தை ஓட்ட முடியாமல் திணறி வருவதோடு தொடர்ந்து விபத்துகள் ஏற்படும் சூழல் நிலவுகிறது. இதன் அருகிலேயே இரண்டு பள்ளிகள் இருப்பதால், நச்சுப் புகையைச் சுவாசிக்கும் மாணவிகளுக்கு மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

மேலும், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அகழியை குப்பை குடோனாக மாற்றி குப்பைகளுக்கு தீ வைப்பது சமூக ஆர்வலர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ​பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இனியாவது இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இந்தப் புகையை அணைக்கவும், குப்பைகளை முறையாக அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Chengalpattu old bus station ,Chengalpattu ,
× RELATED ஐபிஎஸ் அதிகாரிகள் 20 பேரை பணியிட இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு