×

புதர்கள் மண்டி காணப்படும் சோழவரம் ஏரிக்கால்வாயை தூர்வார வேண்டும்: விவசாயிகள் வேண்டுகோள்

ஊத்துக்கோட்டை, ஜன.29: தாமரைப்பாக்கத்திலிருந்து சோழவரம் ஏரிக்கு செல்லும் கால்வாயில் புதர் மண்டி, கழிவு நீர் தேங்கி நிற்கிறது. எனவே, இந்த ஏரி கால்வாயை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பெரியபாளையம் அருகே, தாமரைப்பாக்கம் பகுதியில், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் தடுப்பணை கட்டப்பட்டது. இந்த தடுப்பணையில் மழை காலங்களில் பூண்டி ஏரி நிரம்பினால் அந்த தண்ணீர் திறக்கப்பட்டு தாமரைப்பாக்கம் அணைக்கட்டில் தேக்கி வைக்கப்படும். மீதமுள்ள உபரி நீர் அணைக்கட்டிலிருந்து வெளியேரி கடலுக்கு செல்வது வழக்கம்.

மேலும், தேக்கி வைக்கப்படும் தண்ணீர் அங்குள்ள கால்வாய் வழியாக சோழவரம் ஏரிக்கு திறக்கப்பட்டு, அங்கிருந்து புழல் ஏரிக்கு அனுப்பப்பட்டு, பின்னர் சென்னை மக்களுக்கு குடிநீர் தேவைக்காக விநியோகம் செய்யப்படும்.
ஆனால், கடந்த சில மாதங்களாக தாமரைப்பாக்கத்திலிருந்து சோழவரம் ஏரிக்கு செல்லும் கால்வாயில் செடி-கொடிகள் படர்ந்து கால்வாய் முழுவதும் புதர்கள் மண்டி காணப்படுகிறது. அது மட்டுமல்லாமல், அந்த கால்வாயில் அக்கம் பக்கம் உள்ள வீடு, கடை, ஓட்டல்களிலிருந்து வெளியேறும் கழிவு நீரும் கால்வாயில் கலந்து தேங்கி நிற்கிறது. எனவே, புதர்களை அகற்றி சீரமைத்து, சோழவரத்திற்கு செல்லும் ஏரிக்கால்வாயை, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தூர்வாரியும், கால்வாய் கரைகளை பலப்படுத்த வேண்டும் என்றும், இவ்வாறு தூர்வாரினால், சோழவரம் ஏரிக்கு தண்ணீர் செல்லும் போது கால்வாய் ஓரத்தில் உள்ள விவசாயிகள் நிலத்தடி நீர் உயர்ந்து பயனடைவோம் என அப்பகுதி விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : Cholavaram lake ,Uthukkottai ,Thamaraipakkam ,Periypalayam ,Kosasthalai… ,
× RELATED வடசென்னை அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு