தண்டையார்பேட்டை, டிச.27: காசிமேடு கடலில் அழுகிய நிலையல் ஆண் சடலம் மீட்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, கடலில் தவறி விழுந்து இறந்தாரா, கொலை செய்து சடலத்தை கடலில் வீசப்பட்டதா என விசாரித்து வருகின்றனர். காசிமேடு மீன்பிடி துறைமுக பகுதியில் உள்ள பழைய வார்ப்பு கடல் பகுதியில் ஆண் சடலம் மிதப்பதாக அந்த வழியாக சென்ற மீனவர்கள் காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவருக்கு 40 வயது இருக்கும் என கூறப்படுகிறது. இவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், மீன் பிடித்தபோது தவறிவிழுந்து இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டு கடலில் வீசப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், காசிமேடு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் யாரேனும் காணாமல் போய் உள்ளார்களா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
