×

உயர்கல்வி, தொழில்நுட்ப கல்வி பயிலும் மாணவர்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதி உதவிக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் பிரதாப் தகவல்

திருவள்ளுர், டிச.27: திருவள்ளூர் மாவட்டத்தில் உயர்கல்வி, தொழில்நுட்ப கல்வி பயிலும் மாணவர்கள், முதலமைச்சரின் பொது நிவாரண நிதி கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் பிரதாப் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: திருவள்ளுர் மாவட்டத்தில் வறிய நிலையில் உள்ள ஏழை, எளிய மாணாக்கர்கள் அரசு மற்றும் அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள், வேளாண்மை கல்லூரிகள் மற்றும் சட்ட கல்லூரிகளில் ஒற்றை சாளர முறையில் சேர்க்கை பெற்றுள்ள மாணாக்கர்கள், அவர்களின் குடும்பத்தில் இதுவரை பட்டதாரிகளே இல்லையென்றால் அவர்களை ஊக்குவிக்கும் வகையில், தொழில்நுட்பக் கல்வி மற்றும் உயர் கல்வி பயில்பவர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதி வழங்கும் திட்டத்தில் இருந்து ரூ.50 ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து கல்வி உதவித்தொகை பெற தகுதியுடைய மாணாக்கர்கள் விண்ணப்பங்களை தங்களுடைய வட்டாட்சியர் அலுவலகத்தில், 12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், மனுதாரரின் அசல் மனு, தமிழ்நாட்டில் வசிப்பவர் என்பதற்கான நிரந்தரச் சான்று, ரூ.72 ஆயிரம் மிகாமல் குடும்பத் தலைவரின் வருமானச்சான்று, குடும்ப உறுப்பினர்களின் வயது, கல்வி தகுதி மற்றும் வருமானச் சான்று, ஒற்றைச் சாளர முறை வழியாக சேர்க்கை பெற்றதற்கான சான்று, இருப்பிடச் சான்று ஆகிய ஆவணங்களுடன் இணைத்து அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Collector ,Pratap ,Thiruvallur ,Tiruvallur District ,
× RELATED திருவள்ளூர் வடக்கு ஒன்றிய திமுக...