சென்னை: மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 205 மருந்துகள் தரமற்றவையாகவும், இரு மருந்துகள் போலியாகவும் இருந்ததை கண்டறிந்துள்ளதாக ஒன்றிய மருந்து தரக்கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது. நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து மாத்திரைகளும் ஒன்றிய மற்றும் மாநில மருந்து தரக்கட்டுப்பாடு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்து வருகிறது. அதேபோன்று போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அதன்படி, கடந்த மாதத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்து மாதிரிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. அவற்றில் காய்ச்சல், சளித் தொற்று, கிருமி தொற்று, ஜீரண மண்டல பாதிப்பு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் 205 மருந்துகள் தரமற்றவையாகவும், 2 மருந்துகள் போலியானதாகவும் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அதன் விவரங்களை ஒன்றிய மருந்து தரக் கட்டுப்பாடு வாரியத்தின் https://cdsco.gov.in/ என்ற இணையப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் இந்த விவரங்களை அந்த தளத்தில் அறிந்து கொண்டு விழிப்புணர்வுடன் செயல்படலாம் என்று மருந்து கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.
