மதுரை: சுதந்திர போராட்ட தியாகிகளின் பெயர் அரசு ஆவணங்களில் உள்ளபடியே உள்ள அனைத்து ஆவணங்களிலும் குறிப்பிட வேண்டும் என உத்தரவிடக் கோரிய மனுவை ஐகோர்ட் கிளை ஒத்தி வைத்தது. தூத்துக்குடியை சேர்ந்த செல்வகுமார் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சுதந்திரத்திற்காக போராடியவர். அனைத்து அரசு ஆவணங்களிலும், தமிழக அரசின் சமச்சீர் பாடத்திட்ட புத்தகங்களிலும் தற்போது வரை இடம் பெற்று வரும் பசும்பொன் உ..முத்துராமலிங்கத்தேவர் என்றே உள்ளது. ஆனால் குரூப் 2 எனப்படும் பிரிவிற்காக கடந்த 14-9-2024 அன்று நடைபெற்ற தேர்வில் வினா எண் 104ல் இடம் பெற்றுள்ள ஆங்கில அரசால் ‘வாய்ப்பூட்டு சட்டத்தின்’ மூலம் மேடைகளில் அரசியல் பேசக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டவர் என்கிற வினாவுக்கு கொடுக்கப்பட்டுள்ள பதில்களில் ஒன்றாக முத்துராமலிங்கனார் என்ற பெயரை விடையாக பயன்படுத்தப்பட்டு அதில் இடம் பெற்றுள்ளது.
ஆனால், இதே வினாத்தாளில் வினா எண் 87க்கான விடைகளில் கஸ்தூரி ரங்க அய்யங்கார் என்றும், வினா எண் 92க்கான விடைகளில் ஜி.பி.பிள்ளை என்றும் ஜி.சுப்பிரமணிய ஐயர் என்றும் உள்ளது. எனவே தற்போது அரசு ஆவணங்களில் அவர்களின் பெயர்களின்படியே அனைத்து தலைவர்களும் பொதுவெளியில் பயன்பாட்டில் உள்ளபடியே உள்ள அனைத்து ஆவணங்களிலும் குறிப்பிடவேண்டும் என உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அரசின் கொள்கை முடிவில் தலையிட இயலாது. மனுதாரர் ஆஜராகாததால் வழக்கு விசாரணையை நாளை ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
