சென்னை: ரோடு ஷோக்களுக்கான வழிகாட்டு நெறி முறைகளை வகுக்கக் கோரிய வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. கரூரில் நடைபெற்ற துயர சம்பவத்தை தொடர்ந்து அரசியல் கட்சிகள் ரோடு ஷோக்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகள் கடந்த முறை விசாரணைக்கு வந்த போது தமிழக அரசின் வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் தாக்கல் செய்யப்பட்டன.
இதன் மீது தங்களது பரிந்துரைகளை வழங்க வேண்டும் என அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம் ஸ்ரீவட்சவம், நீதிபதி ஜி.அருள் முருகன் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அதிமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய நாராயணன் தங்களது பரிந்துரைகளை நேற்றே வழங்கிவிட்டதாக கூறினார். அதே போல தவெக சார்பில் ஆஜரான வழக்கறிஞசரும் தங்களுடைய பரிந்துரைகளை தாக்கல் செய்திருந்தனர். அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் அரசியல் கட்சிகள் அளித்துள்ள பரிந்துரைகள் பரிசீலிக்கப்படும் என உறுதி தெரிவித்தார். இதனை அடுத்து இந்த வழக்கில் நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.
