டாக்கா: வங்கதேசத்தில் கடந்த ஆண்டு அரசுக்கு எதிராக மாணவர் போராட்டம் வெடித்தது. இது தொடர்பான வன்முறையில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். பிரதமராக இருந்த ஷேக் ஹசினா ராஜினாமா செய்துவிட்டு வங்கதேசத்தில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சுட்டுக்கொல்ல உத்தரவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே புர்பாச்சலில் உள்ள ராஜூக் நியூ டவுன் வீட்டுவசதி திட்டத்தில் நில ஒதுக்கீட்டில் முறைகேடுகள் தொடர்பான மூன்று வழக்குகளில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு மொத்தம் 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொர வழக்கிலும் தலா 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து டாக்கா சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு வழக்கிலும் தலா வங்கதேச நாணயமான டாக்காவில் 1லட்சம் அபராதம் அல்லது தொகையை சமர்ப்பிக்க தவறினால்18 மாதங்கள் கூடுதல் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ஹசீனாவின் மகன் சஜீப் வாஜெத் ஜாய் மற்றும் மகள் சைமா வாஜெத் புதுல் ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் நீதிபதி மாமுன் தலா ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளார். இருவருக்கும் தலா ஒரு லட்சம் டாக்கா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
