ஒட்டன்சத்திரம், நவ. 27: ஒட்டன்சத்திரம் நகர் பகுதியில் உள்ள மளிகை கடை, பேக்கரி, ஹோட்டல், பழக்கடை உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்களில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள், டீ கப் உள்ளிட்வைகள் அதிகளவில் பயன்பாட்டில் உள்ளதாக புகார் எழுந்தது.
இதையடுத்து நகராட்சி ஆணையாளர் ஸ்வேதா நேற்று முன்தினம் இரவு வர்த்தக நிறுவனங்களில் அதிரடியாக சோதனை நடத்தி பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தார். தொடர்ந்து அரசு விதிகளை மீறி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை செய்தார். உடன் பொறியாளர் சுப்ரமணிய பிரபு, சுகாதார ஆய்வாளர் ராஜமோகன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் இருந்தனர்.
