புதுக்கோட்டை, நவ.26: பெண்களுக்கு சுய தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் வழங்கப்பட உள்ளது என மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் என்ற புதிய திட்டதில் பெண்களுக்கு சுய தொழில் தொடங்க மானியம் வழங்கப்பட உள்ளது என மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்,
இதுகுறித்து அவர் கூறியதாவது,
தமிழ்நாட்டின் பொருளார வளர்ச்சியில் பெண்களின் பங்கு மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் வரை 25 சதவீதம் (அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை) மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவியும், வழங்குவதோடு, தொழில் வளர்ச்சிக்குத் தேவையான தொழில் நுட்ப மற்றும் சந்தைபடுத்துதல் உள்ளிட்ட அனைத்து உதவிகளும் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற பெண்கள் மட்டுமே தகுதியானவர்கள் ஆவார்கள். குறைந்தபட்ச வயது 18 முதல் அதிகபட்ச வயது 55 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தில் மக்கும் பொருட்கள் தயாரிப்பு, விவசாய உற்பத்தி கழிவுகளில் (தவுடு, வைக்கோல்) இருந்து பொருட்கள் தயாரித்தல், தென்னை நார்மூலம் தயரிக்கப்படும் செடி வளர்க்கும் தொட்டிகள், காகித கழிவுளிலிருந்து பென்சில் தயாரித்தல், ஆடை வடிவமைப்பு, அலங்கார அணிகலன்கள் தயாரிப்பு, கண்ணாடி ஒவியம், கண்ணாடி பொருட்கள் தயாரிப்பு, பட்டு நூல் அணிகலன் தயாரிப்பு குழந்தைகள் பராமரிப்பும் நிலையம், வீட்டில் தயார் செய்யும் உணவுபொருட்கள், யோக நிலையம், வளர்ப்பு பிராணி பராமரிப்பும் நிலையம், உடற்பயிற்சி நிலையம், சலவை நிலையங்கள், மணப்பெண் அலங்கார நிலையம், மெகந்தி மற்றும் டாட்டூ நிலையம், சத்து மாவு உருண்டைகள் தயாரிப்பு, சத்து மாவு சார்ந்த பேக்கரி உணவுபொருட்கள் தயாரிப்பு, தானிய வகைகளில் தயார் செய்யும் ஐஸ்கிரிம், எலுமிச்சை எண்ணெய் தயாரிப்பு, வெட்டி வேர் எண்ணெய் தயாரிப்பு உள்ளிட்ட தொழில்களுக்கு முன்னுரிமை அளித்து மானியத்துடன் கூடிய வங்கிக் கடன்பெற்று வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இத்திட்டத்தில் தொழில் துவங்க ஆர்வமுள்ள பெண்கள் எவராயினும் இத்திட்டத்தின் உரிய ஆவணங்களான புகைப்படம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, ஜாதி சான்றிதழ், விலைப்புள்ளி பட்டியலுடன் www.msmeonline.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பித்து பயன் பெறுமாறும், கூடுதல் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், புதுக்கோட்டை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
