சென்னை: ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஜார்ஜ் டவுன், பாரிமுனை, பூக்கடை பகுதிகளுக்கு நடுவில் உயர் நீதிமன்றம் கட்டப்பட்டதால் இப்பகுதிகளில் வசித்த மக்கள் உயர் நீதிமன்றத்தை சுற்றி செல்ல வேண்டிய நிலை உருவானது. நாளடைவில் அது அதிக தூரமாக கருதி உயர் நீதிமன்ற வளாகத்தை வழிப்பாதையாக பயன்படுத்த தொடங்கினர். இதை கவனத்தில் கொண்ட நீதிமன்ற நிர்வாகம், மக்கள் வருங்காலங்களில் நீதிமன்ற வளாக வழிப்பாதைகளை உரிமை கோரி விடக்கூடாது என்பதற்காக நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் வருடத்தில் ஒரு நாள் மக்கள் பயன்படுத்த முடியாத வகையில் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நடைமுறை ஒவ்வொரு வருடத்தின் நவம்பர் இறுதி வாரத்தின் சனிக்கிழமையில் கடைபிடிப்பது வழக்கம். அதன்படி நவம்பர் 22ம் தேதி (சனிக்கிழமை) இரவு 8 மணி முதல் 23ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8 மணி வரை சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து நுழைவாயில்களும் மூடப்படும் என்றும் இந்த நேரத்தில் வழக்கறிஞர்கள், பொதுமக்கள் என யாருக்கும் நீதிமன்றத்தில் நுழைய அனுமதி இல்லை என்றும் உயர் நீதிமன்ற நிர்வாக பதிவாளர் பி.ஹரி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு உயர் நீதிமன்றத்தின் அனைத்து நுழை வாயில்களிலும் ஒட்டப்பட்டுள்ளது.
