சென்னை: சபரிமலை மண்டல பூஜைக்காக நவ.16ம் தேதி முதல் ஜன.16ம் தேதி வரை போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள அய்யப்பன் ஆலயத்திற்கு, ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு ஆகிய திருவிழாக்களின் போது, தமிழகத்திலிருந்து அய்யப்ப பக்தர்கள் சென்று வர ஏதுவாக, தமிழகத்தின் முக்கிய நகரங்களிலிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி இந்தாண்டும் நவம்பர் 16ம் தேதி முதல் அடுத்தாண்டு ஜனவரி 16ம் தேதி வரை (சென்னை கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம்), திருச்சி, மதுரை மற்றும் புதுச்சேரி – கடலூர் ஆகிய இடங்களிலிருந்து பம்பைக்கு, அதிநவீன சொகுசு மிதவைப் பேருந்துகள் குளிர்சாதன பேருந்து மற்றும் குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி உள்ள சிறப்பு பேருந்துகளாக இயக்கப்படவுள்ளன. (சபரிமலை தேவஸ்தானம் அறிவிப்பின்படி டிச.27ம் தேதி முதல் டிச.30ம் தேதி மாலை 5.00 மணி வரை கோவில் நடை சாத்தப்படுவதால் 26ம் தேதி முதல் 29ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படமாட்டாது).
இந்த வருடம் பக்தர்கள் கூடுதலாக பயணம் செய்ய முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றினை கருத்தில் கொண்டு சென்னை மற்றும் இதர இடங்களிலிருந்து கூடுதலாக பேருந்துகள் இயக்குவதற்கு அனுமதி பெறப்பட்டு சிறப்பான முறையில் பேருந்துகளை இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் குழுவாக செல்லும் பக்தர்களுக்கு வாடகை அடிப்படையில் பேருந்து வசதி செய்து தரப்படும். மேலும், 60 நாட்களுக்கு முன்னதாக இச்சிறப்பு பேருந்துகளுக்கு ஆன்லைன் மூலமாக www.tnstc.in மற்றும் டிஎன்எஸ்டிசி அதிகாரப்பூர்வ செயலி ஆகிய இணையத்தளங்களில் முன்பதிவு செய்துகொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பேருந்துகளின் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களுக்கு, 9445014452, 9445014424 மற்றும் 9445014463 ஆகிய கைப்பேசி எண்களைத் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
