காங்கயம், டிச. 31: பொங்கல் பண்டிகையின்போது குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி மற்றும் 1 கிலோ சர்க்கரை போன்ற பொருட்களுடன் ரூ.2,500 பணம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவிருந்தார். இந்த அரசாணையில் ரேஷன் கடை பணியளார்கள் மூலமே வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. பொங்கல் பரிசுகளுக்காக வழங்கப்படும் டோக்கன்களில் அ.தி.மு.க.வினர் டோக்கன்கள் வழங்குவதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர் என குற்றசாட்டு எழுந்துள்ளது. நேற்று காங்கயம் அருகே உள்ள பரஞ்சேர்வழி ஊராட்சி நத்தக்காட்டுவலசு கிராமத்தில் பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது.
இதில் ஆலாம்பாடி கூட்டுறவு சங்கதலைவர் தங்கமுத்து, பரஞ்சேர்வழி அ.தி.மு.க. ஊராட்சி செயலாளர் சின்னசாமி, சுப்ரமணியம், திருநாவுக்கரசு உள்ளிட்ட அ.தி.மு.க. பிரமுகர்கள், ரேசன்கடை பணியாளர்களுடன் சேர்ந்து டோக்கன் வழங்கியுள்ளனர். இது குறித்து தி.மு.க. நிர்வாகிகள் கூறியபோது, ‘‘பொங்கல் பரிசு டோக்கனை ரேஷன் கடை பணியாளர்கள்தான் வழங்கவேண்டும். ஆனால் அ.தி.மு.க. நிர்வாகிகள் பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கி வருகின்றனர். இதன்மூலம் அ.தி.மு.க. கட்சி வழங்குவதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இது குறித்து காங்கயம் தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்தனர்.