புதுடெல்லி: பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு தளவாட கொள்முதல் குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், முப்படைகளின் போர் திறனை மேம்படுத்துவதற்காக ரூ.79 ஆயிரம் கோடியில் ஆயுத தளவாடங்கள் வாங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதில், எதிரிகளின் போர் வாகனங்கள், பதுங்குக் குழிகள், உள்ளிட்டவற்றை அழிப்பதற்கான எம்கே-2 நாக் ஏவுகனைகளை கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ராணுவத்தினருக்கு தேவையான சரக்கு போக்குவரத்திற்காக அதிநவீன வாகனங்கள் கொள்முதல் செய்வதற்கும், 30 எம்எம் கடற்படைத் துப்பாக்கி, மேம்பட்ட இலகுரக நீர்மூழ்கிக் குண்டுகள், 76 எம் எம் அதிநவீன துப்பாக்கிக்கான வெடிமருந்து வாங்கவும் ஒப்புதல் தரப்பட்டுள்ளது.
கடல்சார் நடவடிக்கை மற்றும் கடல்கொள்ளை தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் இந்திய கடற்படை மற்றும் இந்தியக் கடலோரக் காவல் படையின் திறனை மேம்படுத்துவதற்காக 30 எம்எம் துப்பாக்கி கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு கொள்முதல் தொடர்பான 2வது பெரிய முடிவு இது. இதற்கு முன், கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி ரூ.67,000 கோடி மதிப்பிலான ஆயுத தளவாடங்கள் கொள்முதல் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
