திருச்சி: அண்ணா பிறந்த நாளையொட்டி திருச்சி சிந்தாமணி அருகே அண்ணா சிலைக்கு நேற்று தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: உச்ச நட்சத்திரங்களுக்கு மக்கள் கூட்டம் கூடுவது இயல்பு தான். இதை நாங்கள் 1990களில் இருந்து பார்த்து வருகிறோம். விஜயகாந்துக்கும் அதிக அளவில் கூட்டம் கூடியது. விஜய்க்கும் கூட்டம் கூடியது. விஜய் அந்த கூட்டத்தை முறையாக ஒழுங்குபடுத்தி இருந்தால் இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம்.
விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து குறுகிய காலத்திலேயே அதிக வாக்கு சதவீதம் பெற்றவர். அவருடன் வேறு யாரையும் ஒப்பிடவே கூடாது. அவ்வாறு ஒப்பிடுவது தவறான கண்ணோட்டம். விஜய் குறித்த அனைத்து கேள்விகளுக்கும் விஜய் தான் பதில் அளிக்க வேண்டும். மற்றவர்களிடம் கேள்வி கேட்பது தவறு. எல்லா கட்சியும் எங்களுடைய நண்பர்கள் தான். கூட்டணி குறித்து முடிவெடுக்க இன்னும் எங்களுக்கு நேரம் வேண்டும். விஜயகாந்த் இல்லாமல் நாங்கள் சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் எங்களுடைய கட்சி வளர்ச்சியில் தான் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
