திருப்பூர், டிச. 21: சமையல் காஸ் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் திருப்பூரில் சிலிண்டருக்கு பாடை கட்டியும், விறகு அடுப்பில் சமையல் செய்தும் நேற்று போராட்டம் நடந்தது. சமையல்காஸ் விலை உயர்வை கண்டித்து திருப்பூர் தாராபுரம் ரோடு புதூர் பிரிவு பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் காஸ் சிலிண்டருக்கு பாடை கட்டி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட நிர்வாக்குழு உறுப்பினர் காட்டே ராமசாமி தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் ரவி, ஏஐடியுசி மாவட்ட பொதுச்செயலாளர் சேகர், கிளைத்தலைவர் மோகன், மண்டல துணை செயலாளர் விஜய் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்தும், சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும், விவசாய திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும், மின்சார மசோதாவை கைவிட வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதே போல் சமையல் காஸ் விலை உயர்வை கண்டித்து திருப்பூர் பட்டுக்கோட்டையார் நகர் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் விறகு அடுப்பில் சமையல் செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பட்டுக்கோட்டையார் நகர் கிளைச் செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மண்டல குழு உறுப்பினர் பஞ்சவர்ணம் முன்னிலை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ரவி, ஏஐடியுசி மாவட்ட பொதுச்செயலாளர் சேகர், மாதர் சம்மேளன மாவட்ட செயலாளர் சங்கீதா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர் இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.