கோவை,ஆக.11: கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் இஸ்மாயில். இவரது மனைவி அஜிமா (56). இவருக்கு கடந்த சில மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 8-ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற அஜிமா வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் பல்வேறு பகுதிகளில் தேடினர்.அவர் கிடைக்கவில்லை.
இது தொடர்பாக கரும்புக்கடை போலீசில் அளித்த புகாரின் பேரில்,போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், குறிச்சி குளத்தில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று குளத்தில் இருந்த பெண் உடலை மீட்டு விசாரணை செய்தனர். அப்போது குளத்தில் மூழ்கி இறந்த பெண் அஜிமா என தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
