கார்த்திகை தீபத்திருவிழா 6ம் நாள் உற்சவம்; யானை வாகனத்தில் சந்திரசேகரர் பவனி: நாளை மகா தேரோட்டம்


திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாளான இன்று காலை மூஷிக வாகனத்தில் விநாயகரும் யானை வாகனத்தில் சந்திரசேகரரும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. 5ம் நாளான நேற்றிரவு பஞ்சமூர்த்திகள் மாட வீதியில் பவனி வந்தனர். கடும் குளிரையும் பனியையும் பொருட்படுத்தாமல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ம் நாளான இன்று காலை சுவாமிக்கும் அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக, அலங்காரம், தீபாராதனை நடந்தது. அதைத்தொடர்ந்து ராஜகோபுரம் எதிரில் உள்ள 16 கால் மண்டபத்தில் இருந்து மேளதாளம் முழங்க காலை உற்சவம் தொடங்கியது.

அப்போது ரிஷப வாகனத்தில் விநாயகரும் யானை வாகனத்தில் சந்திரசேகரரும் எழுந்தருளி மாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தனித்தனி விமானங்களில் 63 நாயன்மார்கள் மாடவீதியில் பவனி வந்தனர். நாயன்மார்களை பள்ளி மாணவர்கள் தோளில் சுமந்தபடி மாடவீதியை பவனி வந்தனர். இன்று மாலை 3.30 மணிக்கு கோயில் கலையரங்கில் சமய சொற்பொழிவும், மாலை 6 மணிக்கு பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இரவு வெள்ளி விமானத்தில் விநாயகரும், வெள்ளி ஆச்சி விமானத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியரும், வெள்ளி தேரில் அண்ணாமலையாரும், வெள்ளி இந்திர விமானத்தில் உண்ணாமுலையம்மனும் வெள்ளி விமானத்தில் சண்டிகேஸ்வரரும் பவனி வந்து அருள்பாலிக்க உள்ளனர்.

தீபத் திருவிழாவில் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மகா தேரோட்டம் எனப்படும் பஞ்ச ரதங்கள் (5தேர்கள்) பவனி நாளை காலை முதல் இரவு வரை நடைபெறுகிறது. முதலில் விநாயகர் தேர் புறப்பாடு நடைபெறும். பின்னர் சுப்பிரமணியர் தேர் மாட வீதியில் பவனி வரும். பகல் 1 மணி அளவில், அண்ணாமலையார் அருள்பாலிக்கும் பெரிய தேர் எனப்படும் ‘மகா ரதம்’ பவனி வரும். மகா ரதம் நிலையை அடைந்ததும், உண்ணாமுலையம்மன் தேர் புறப்பாடு நடைபெறும். உண்ணாமுலையம்மன் தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்துச்செல்வது அதன் தனிச்சிறப்பாகும். தேரோட்டத்தின் நிறைவாக, சண்டிகேஸ்வரர் தேர் பவனி நடைபெறும். தேர் சக்கரங்களை சுற்றிலும் 20 மீட்டர் இடைவெளி வரை பக்தர்கள் யாரும் செல்லாதபடி, போலீஸ் பாதுகாப்பு வளையம் அமைக்க உள்ளனர். மகாதீப பெருவிழா நடைபெற இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் பக்தர்களின் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது.

தற்காலிக பஸ் நிலையம்
திருவண்ணாமலை தீப திருவிழாவை முன்னிட்டு வரும் 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை செயல்பட உள்ள தற்காலிக பஸ் நிலையங்கள் விவரம்: லூர் ரோடு-அண்ணா நுழைவு வாயில்: போளூர், வேலூர், ஆரணி, ஆற்காடு, செய்யாறு வழித்தட பஸ்கள் நிற்க வேண்டும். அவலூர்பேட்டைரோடு-எஸ்ஆர்ஜிடிஎஸ் பள்ளி எதிரில் திறந்தவெளி திடல்: வந்தவாசி, காஞ்சிபுரம் செல்லும் பஸ்கள். திண்டிவனம் ரோடு-ஒழுங்கு முறை விற்பனைக்கூடம்: செஞ்சி, திண்டிவனம், புதுச்சேரி, தாம்பரம், அடையாறு, கோயம்பேடு செல்லும் பஸ்கள். வேட்டவலம் ரோடு-சர்வேயர் நகர் திறந்த வெளி திடல்: வேட்டவலம், விழுப்புரம் வழியாக செல்லும் பஸ்கள்.

திருக்கோவிலூர் ரோடு-நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் மற்றும் அருணை மருத்துவக்கல்லூரி அருகில் மற்றும் வெற்றிநகர்: திருக்கோவிலூர், பண்ருட்டி, கடலூர், சிதம்பரம், கும்பகோணம், திட்டக்குடி, விருத்தாசலம், நாகப்பட்டினம், திருச்சி, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி செல்லும் பஸ்கள். ணலூர்பேட்டைரோடு-செந்தமிழ்நகர் திறந்தவெளி திடல்: கள்ளக்குறிச்சி, தானிப்பாடி, சாத்தனூர்அணை செல்லும் பஸ்கள். செங்கம் ரோடு-அத்தியந்தல் மற்றும் சுபிக்க்ஷா கார்டன் மைதானம்:தருமபுரி, திருப்பத்தூர், சேலம், பெங்களூர், ஓசூர், ஈரோடு, கோயம்புத்தூர் செல்லும் பஸ்கள். காஞ்சி ரோடு-டான்பாஸ்கோ பள்ளி மைதானம்: மேல்சோழங்குப்பம் செல்லும் பஸ்கள்.

The post கார்த்திகை தீபத்திருவிழா 6ம் நாள் உற்சவம்; யானை வாகனத்தில் சந்திரசேகரர் பவனி: நாளை மகா தேரோட்டம் appeared first on Dinakaran.

Related Stories: