இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 1,093 கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றிருக்கின்றது. கோயில்களுக்கு சொந்தமான ரூ.5472 கோடி மதிப்பிலான 5,820 ஏக்கர் நிலங்கள் இதுவரை மீட்கப்பட்டிருக்கின்றன. அறநிலையத்துறை வரலாற்றிலேயே குடமுழுக்கு பணிகள் என்றாலும், நில மீட்பு பணிகள் என்றாலும் இந்த ஆட்சியில் செய்தது போல் இதற்கு முன் நடைபெற்றது இல்லை என பக்தர்கள் முழு மகிழ்ச்சியோடு வரவேற்றுக் கொண்டிருக்கின்றார்கள். கோயிலின் நிதி மற்றும் உபயதாரர்கள் நிதியின் மூலம் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் அனைத்தும் முழுமையடைகின்ற போது இந்த ஆட்சியை பாராட்டாதவர்களே இருக்கமாட்டார்கள். அந்த அளவிற்கு எங்களின் செயல்பாடுகள் அமையும்.
மயிலாப்பூர், கபாலீசுவரர் கோயில் நிதியின் மூலம் ரூ.29 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் புதிய கலாச்சார மையம் குறித்து கூறப்படும் குற்றச்சாட்டு தவறானது. இது முழுமையாக பக்தர்களின் பயன்பாட்டிற்காக அக்கோயிலின் அறங்காவலர்களின் ஒப்புதலுடன் நமது கலை, கலாச்சாரம், பண்பாட்டை காக்கும் வகையில் அமைக்கப்படுகிறது. கோயிலின் நிதியை அப்படியே வைத்திருப்பதால் என்ன பலன் கிடைக்க போகின்றது. அதனை கொண்டு பக்தர்களின் மேம்பாட்டிற்காக செலவிடுவது குற்றமாகாது. ஆகவே சட்டத்திற்கு உட்பட்டு, அறங்காவலர் குழுவின் ஒப்புதலோடு அந்த நிதியை கலாச்சார மையத்திற்கு பயன்படுத்த இருக்கின்றார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் விருகம்பாக்கம் எம்எல்ஏ பிரபாகர்ராஜா, இணை ஆணையர் ரேணுகாதேவி, கவுன்சிலர் லோகு, செயல் அலுவலர் கேசவராஜன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல் உபயதாரர் நிதி மூலம் கோயில்களில் ரூ.800 கோடி மதிப்பீட்டில் பணிகள் appeared first on Dinakaran.