4 ஆண்டுகளுக்கு முன் உயிரிழப்பு ஒரு கோடி ரூபாய் செலவில் மனைவிக்கு மணி மண்டபம்: கணவரின் செயலால் நெகிழ்ச்சி

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே கட்டுகுடி கிராமத்தை சேர்ந்தவர் கோட்டைமுத்து (75). சென்னை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி விஜயா. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த 15.5.2020ல் விஜயா உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். மனைவி மீது பிரியம் வைத்திருந்த கோட்டைமுத்து, அவரது அஸ்தியை எடுத்து வந்து திருவாடானை அருகே சொந்த ஊரான ஆதியூரில் ₹1 கோடி செலவில் மணிமண்டபம் கட்டி உள்ளார்.

அங்கு மனைவிக்கு ₹7 லட்சத்து 50 ஆயிரத்தில் வெண்கலச் சிலை அமைத்துள்ளார். அந்த மணி மண்டபத்தில் உள்ளே கணவன், மனைவி கலந்து கொண்ட விசேஷங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. நேற்று இந்த மணி மண்டபம் திறக்கப்பட்டது. இதில் உறவினர்கள், கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கோட்டைமுத்து கூறுகையில், ‘‘எனது மனைவி விஜயா, குடும்பத்திற்காக உழைத்து அன்பையும், நல்ல பெயரையும் ஏற்படுத்திக் கொடுத்தார். அவரின் நினைவாக இந்த மணிமண்டபத்தை கட்டி உள்ளேன்’’ என்றார்.

The post 4 ஆண்டுகளுக்கு முன் உயிரிழப்பு ஒரு கோடி ரூபாய் செலவில் மனைவிக்கு மணி மண்டபம்: கணவரின் செயலால் நெகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: